சுட சுட செய்திகள்

Monday, December 27, 2010

படித்ததில் பிடித்தது !!

ஒரு ஐ.டி துறையை சார்ந்த ஒரு மனிதன் தன்னுடைய லேப் டாப் கம்ப்யூட்டர வச்சுகிட்டு ஒரு ஆற்றின் ஓரமா தன்னோட வேலைய அதுல பாத்துட்டுருந்தான்.அப்பொழுது கைத்தவறி அந்த கணினி ஆத்துல விழுந்துருச்சு.அந்த சமயத்துல கடவுள பாத்து வேண்டுறான்,எப்படியாவது கிடைச்சுரனும்னு.அப்படியே வேண்டிட்டு இருக்கும்போது அந்த ஆத்துல இருந்து ஒரு தேவதை வந்து என்ன ஆச்சுனு கேட்டது.இவனும் நடந்த விவரங்கள் எல்லாத்தையும் கூறினான்.உடனே தேவதை தண்ணீருக்குள் மூழ்கி ஒரு சின்ன வடிவத்தினால் ஆன ஒரு பென் ட்ரைவ்(pen drive) மாதிரி ஒன்ன எடுத்துட்டு வந்து இதுதானா? அப்படினு கேட்டது,இவன் அதற்கு"இது இல்ல"னு பதிலளித்தான்.உடனே அது திரும்பவும் தண்ணீருக்குள் மூழ்கி ஒரு "கால்குலேட்டர்(calculator)" மாதிரியான பொருளை கொண்டு வந்து இடுதானா என வினவியது.இப்பவும் மனிதன் "இது இல்ல"னு சொன்னான்.தேவதை மூணாவது முறையும் மூழ்கி இவனுடைய லேப் டாப்(laptop) ப எடுத்துட்டு வந்தது.இந்த முறை மனிதன் இதுதான் என்னுடையதுனு சொன்னான்.நம்ம கதையில வர மனுஷ பய புள்ள இருக்கானே இந்த மாதிரியெல்லாம் நடந்த உடன் அவனோட சிறு வயது நியாபகம் வந்தது.உழவன் ஒருவன் இந்த மாதிரி கோடாரி ஒன்ன ஆத்துல தவற விட்ருவான்,அப்ப தேவதை என்ன பண்ணும்,வெள்ளி ல ஒன்னும்,தங்கத்துல ஒன்னுமா எடுத்துட்டு வந்து கேட்கும்.உழவன் அவனோட கோடாரிய மட்டும் என்னோடதுனு சொன்ன உடனே இவனோட நேர்மைய பாராட்டி அந்த மூன்று கோடாரியயும் அவனிடமே கொடுத்து விடும்.இப்ப இங்க வருவோம்.மனிதன் சொன்னானா,லேப் டாப் மட்டும்தான் என்னோடதுனு.அதற்கு தேவதை லேப்டாப் ப குடுத்துட்டு ஒரு சிரிப்பு சிரித்தது.மனிதன் கேட்டான் ஏன் சிரிக்கிற என்னைய பாத்துனு? தேவதை சொன்னது" நான் முதலாவதாகவும்,இரண்டாவதாகவும் காட்டினது பல மில்லியன்,ட்ரில்லியன் குடுத்து வாங்க வேண்டிய எதிர் காலத்துல வரக்கூடிய கம்ப்யூட்டர்"எதுவுமே நமக்குதான் தெரியும்னு இருக்காதனு சொல்லிட்டு மறைந்தது.மனிதனுக்கு அப்பொழுதுதான் உரைத்தது தன் தவறு.

(2)


இரண்டாவது வருடம் தான் கல்லூரி வாழ்க்கையின் உச்சம்.
முதல் வருடத்தில் பாதிநாட்கள் பயத்திலும், குழப்பத்திலும் போய்விடும் என்றால் மூன்றாம் வருடம் பொறுப்புணர்ச்சி வந்து தொலைத்து விடும்.. ஆக, இரண்டாம் வருடம் தான்..
இரண்டாம் வருடம் எண்ட்ரி ஆனவுடன், கையில் ஒரே ஒரு நோட்.. எந்த சப்ஜெக்ட் என்றாலும் அதில் தான்.. அதுவும் லேமினேட் செய்யப்பட்ட டெண்டுல்கர், கொஞ்சம் விசயம் தெரிந்தவன் என்றால் மார்க் வாவோ, ப்ரைய்ன் லாராவோ.. அந்த நோட்டை சுருட்டி பிடிப்பதில் இருக்கும் லாவகத்தில் தெரியும் அந்தந்த மாணவர்களின் தெம்பு.

புரொஃபசர்களிடமும் சற்று தைரியமாக பேச வைக்கும். கலாய்ப்புகள் அரங்கேறுவதும் இரண்டாம் வருடம் தான்..

“ நீங்க தெய்வம் சார்..”

“ அப்படியெல்லாம் இல்லப்பா.. எங்க கடமய செய்யிறோம்..”

“அது இல்ல சார்.. தெய்வம் தான் நின்று கொல்லும்”
“ நினைச்சேன்ய்யா.. நீ எல்லாம் எங்க உருப்பட போற..இந்த ஹவர் உனக்கு ஆப்செண்ட்..”

இது இப்படி என்றால் இன்னொரு லெக்சரரிடம்,

“சார் ஒன்னும் தெரியல.. இன்னும் கொஞ்சம் மேல எழுதுங்க சார்”

“இது ஓக்கேயாய்யா?”

“இல்ல சார் தெரியல.. இன்னும் கொஞ்சம் மேல..”

யோவ்.. நான் குட்டைனு எனக்குத் தெரியும்யா.. இதுக்கு மேல எழுத முடியாது” என சாக்பீஸை கொண்டு எறி(ரி)வார்.

இப்படி ஆசிரியர்களை கலாய்ப்பதோடு நின்று விடாமல் நன்றாக படிக்கும் மாணவர்களை அழுக விடுவதும் அப்பொழுதுதான்..

“ டேய் சங்கர், உன்னோட டெஸிகேட்டர் உடைஞ்சு போச்சுடா..”

“ இல்ல பாஸ்.. இதோ இருக்கே என்னோடது.. உன்னோடது தானே இப்ப உடைஞ்சது”

“ ஆனா உன் பேர்ல இல்லடி எடுத்தேன்”

அதாவது, Labல் இருந்து உபகரணங்களை எடுக்கும்பொழுது வேண்டும் என்றே அடுத்தவன் ரோல் நம்பரை கொடுத்து எடுப்பார்கள்.. உடைந்து விட்டால் fine அவன் தலையில்.

ப்ராக்டிக்கல் வகுப்புகளில் இப்படிப்பட்ட கலாய்ப்புகள் நடந்து கொண்டே இருக்கும்.. அதுவும் நல்லா படிப்பவர்கள் பொசுக் பொசுக் என்று answer கண்டுபிடித்துவிடுவார்கள்.. அதோடு நிறுத்திக் கொள்ளாமல் labக்குள் ஒரு நகர்வலம் வேறு வருவார்கள்.. யார் தப்பாக செய்து கொண்டிருக்கிறார்கள் என போட்டு கொடுப்பதற்கு..அதனால்தான் அந்த டெஸிகேட்டர் உடைப்பு பழிவாங்கல்..

‘ப்ராக்ஸி’.. இது ஒரு தேசியகீதம்.. அதாவது வகுப்புக்கு வராத நண்பனுக்காக “எஸ் சார்” என அட்டண்டெண்ஸ் குடுப்பது.. அவ்வளவு ஈஸியான மேட்டர் இல்லை இது.. ‘டைமிங்’ ரொம்ப முக்கியம்.. அவனுடைய ஒரிஜினல் நம்பரை சார் சொல்லும் பொழுது வேறு ஒரு டோனில் “எஸ் சார்” என்று சொல்ல வேண்டும்.. நண்பனின் ரோல் நம்பர் வரும் பொழுது சந்தேகம் வராமல் “ப்ரசண்ட் ஸார்” என்று சொல்ல வேண்டும்.. நம்ம நேரத்திற்கு என்று நிமிர்ந்து பார்த்தார் என்றால் அவ்வளவு தான் .. முதல் பெஞ்ச் ‘படிப்பிஸ்ட்டுகள்’ வேண்டும் என்றே திரும்பிப் பார்த்து மாட்டி விடுவார்கள்..

“லைட்டா டவுட் ஆகிப் பார்த்தான் மாப்ள.. தெளிவா நோட்ட கீழ போட்டு குனிஞ்சிட்டேன்.. நாங்கள்ளாம் எப்ப்பிடி..” இதில் பார்த்தான் என்பது ஆசிரியரைத்தான்.

“நம்ம செட்ல எல்லாப்பயளும் நாளைக்கு வேட்டி கட்டி வந்து அசத்துவம் மாப்ள”

“சூப்பர்டா.. காலேஜே தெறிக்க விடுவோம்.. வெள்ள சட்டையா மாப்ள?”

“ சட்ட எதுனாலும் ஓக்கே தான் மச்சி.. வேட்டில சும்மா நச்சுனு வருவோம்”

ஒரே ஒருவனை குறிவைத்து இந்த வலைவிரிப்பு நடக்கும். மற்றவர்கள் எப்பொழுதும் வரும் உடையில் தான் வருவார்கள்.

மறுநாள்,அந்த டார்கெட் செய்யப்பட்ட,கொஞ்சம் ஒல்லியாய் இருப்பவன் மட்டும் வேட்டியை கட்டிக்கொண்டு அது இடுப்பிலும் நிக்காமல் குச்சிக் கால்கள் என திருஷ்டி பொம்மையே அசிங்கமாய் இருப்பது போல வருவான்.. முதலிலேயே பேசி வைத்த மற்றவர்கள் சிரிப்பாய் சிரிப்பார்கள்..

“இதுக்குத்தாண்ட உங்க பேச்ச கேட்டக்கூடாதுன்றது.. இனி உங்க சங்காத்தமே வேணாம்.. சரியான இளிச்சவாயனாக்கிவிட்டீங்களேடா..ச்சே.. வர்ற வழியில எத்தன பேரு அசிங்கமா பார்த்தாங்க தெரியுமா..”

என புலம்புவனை.. “விடு மாப்ள.. இதுக்கு பேருதுதான் பட்டையகட்டி இறக்குறது.. வா ஒரு பீர போடுவோம்..”


குரூப்பாக எங்கு சென்றாலும் தெனாவட்டும் கூடவே செல்லும்.. செட்டு அப்படி..


“எல்லாருக்கும் இட்லிதானப்பா”
“என்னய்யா மெனுகார்டுல இட்லி இம்புட்டு வெல போட்டு இருக்கீங்க..”

“ நம்ம ஹோட்டல் சுத்தம் அப்பிடி தம்பி”


“உங்க ஹோட்டல்ல மட்டும் இட்லி மாவ என்ன ‘ரெய்மாண்ட்ஸ்’ துணிலயா வேக வக்கிறீங்க.. அதே பழைய வேட்டித்துணிதானய்யா..”


இப்படியான எகத்தாளம் எங்கும் பறக்கும்.

இப்படி சலனமில்லா நட்பின் குதூகுலத்திற்கு குறுக்கே வந்து விழும் கல்..காதல்..செட்டில் எவனுக்காவது,எவள் மேலாவது..

Wednesday, December 15, 2010

கருணாநிதி நமக்கு எழுதிய கடிதம்........(பாவம்ங்க அவரு...)

கருணாநிதி நமக்கு எழுதிய கடிதம்........(பாவம்ங்க அவரு...)

உடன்பிறப்பே,

முதலைக் கூட்டம் போல வளர்ந்துள்ள எனது குடும்பத்தின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு நேரம் கிடைக்காமல் திண்டாடும் ஒரு சூழலில், மனம் வெதும்பி ராமச்சந்திரா மருத்துவமனையில் ஓய்வெடுக்க ஒதுங்கும் சூழலில், இப்படி ஒரு கடிதத்தை உனக்கு எழுதுவதற்கு காரணம் என்னவென்று நீ அறிய மாட்டாய் நான் அறிவேன்.

குறுக்கே நூல் அணிந்த ஒரு குறுக்குப் புத்திக் காரர்களின் கூட்டம், குடும்பத்திற்கு, கழக குடும்பத்திற்கு எதிராக கிளம்பியிருப்பதை நீ அறிந்திருப்பாயா இல்லையா என்பதை நான் அறியேன்.
அந்தக் குறுநரிக் கூட்டம் என்னவெல்லாம் எழுதி விட்டது. குபேர குடும்பமாம். என்ன ஒரு ஆணவம் ? ஒரு குசேலக் குடும்பத்தை குபேரக் குடும்பம் என்று சொல்ல என்ன துணிச்சல் ?

அண்ணாசாலை ஆரியக் கூட்டத்தின் கொட்டத்தை சாந்துப் பொட்டை வைத்து அடக்கிய ஒரு சில நாட்களுக்குள் ராதாகிருஷ்ணன் சாலை ராட்சசர்கள் புதிதாக கிளம்பியிருக்கிறார்கள்.

திருக்குவளையிலிருந்து, திருட்டு ரயிலேறி, தகரப் பெட்டியோடு சென்னை வந்து, தீயசக்தியாக உருமாறி, ஏழை உழைப்பாளி மக்களுக்காக உழைத்துக் கொண்டிருக்கும் என்னையா குபேரக் குடும்பம் என்கிறார்கள் ?

பெயரிலே ஆங்கிலம். உணர்விலே பார்ப்பனீயம். உள்ளத்திலே நஞ்சு. இதுதான் இந்தியா டுடே.

இந்தியா டுடே இதழை விட பாரம்பரியம் மிக்க பத்திரிக்கை அதிபர்களான கோயங்கா குடும்பத்தினர், இன்று இந்தியன் எக்ஸ்பிரஸ் மற்றும் தினமணி நாளிதழ்களை தமிழக அரசின் செய்தி ஏடுகளாக மாற்றி விட்டு, பல அடுக்கு மாடி கட்டிடங்களை கட்டி சத்தமில்லாமல் வேறு தொழிலுக்கு போக வில்லையா ?

மவுண்ட் ரோடு மகாவிஷ்ணு என்று என்னால் அன்போடு அழைக்கப் பட்ட இந்து நாளேடு, இன்று கருணாநிதியின் சொம்பு நாளேடாக மாறவில்லையா ?

ஒரே ஒரு விசாரணை கமிஷன் போட்டு, டெக்கான் க்ரானிக்கிள் நாளேட்டையும், பகவான் சிங்கையும், மண்டியிட வைக்க வில்லையா ?

அரசு விளம்பரங்களை அள்ளிக் கொடுத்து, டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழை கோபாலபுரம் டைம்ஸாக மாற்றவில்லையா ?

இன்று தமிழ்நாட்டில் எந்தப் பத்திரிக்கையாவது உண்மையை எழுத என்னை மீறி முடியமா ? அப்படி மீறி எழுதினால் கழக உடன்பிறப்பான நீ பொறுமை காப்பாயா ? ராதாகிருஷ்ணன் சாலையில், புறநானூற்றுப் புலிப்படை அணி வகுத்தால் என்ன ஆகும் ? ஆனால், அறிஞர் அண்ணா எனக்கு அறவழியைத் தான் சொல்லிக் கொடுத்திருக்கிறார்.

தமிழுக்காகவும், திராவிட இனத்துக்காகவும் பாடுபட்டதைத் தவிர, என்ன குற்றத்தை செய்து விட்டான் இந்தக் கருணநிதி ? இந்தக் கருணாநிதி மீது களங்கம் கற்பிக்க வேண்டுமென்றுதானே, இவ்வாறு பொய்யையும், புரட்டையும், புனைசுருட்டையும், உண்மை என்று சில ஏடுகளிலே எழுதிக் கொண்டிருக்கிறார்கள் ?

குபேரக் குடும்பம் என்று எழுதுகிறார்களே நாங்கள் மட்டுமா குபேரக் குடும்பம். வட இந்தியாவிலே, திருபாய் அம்பானி என்ற ஒருவர் இருந்தார். என்னைப் போலவே, பிற்பட்ட சமூகத்தில் பிறந்து, ஒரு சாதாரண பெட்ரோல் பங்க்கிலே வேலை பார்த்து, இன்று இந்தியாவே வியக்கும் அளவுக்கு ஒரு சாம்ராஜ்யத்தை கட்டியுள்ளாரே . அந்தக் குடும்பம் குபேரக் குடும்பமாக தெரியவில்லையா ?

அவர் மறைவுக்குப் பின், அவரது இரு மகன்களும் சண்டையிட்டுக் கொண்டு, அந்த நிறுவனத்தை இரண்டாகப் பிரித்து இன்று அவர்கள் இருவரும் தங்களுக்கென்று தனித் தனி சாம்ராஜ்யங்களை அமைத்துக் கொள்ள வில்லையா ?

அது போலத்தானே நமது கழகமும் ? திருபாய் அம்பானிக்கு ஒரு மனைவி இரு மகன்கள், ஒரு மகள். எனக்கு மூன்று மனைவிகள், மகன்கள் மற்றும் மகள்களின் கணக்கு சட்டென நினைவுக்கு வரவில்லை. அதனால், மூன்று பேருக்காக ஒரு லட்சம் கோடிகளை சேர்க்கும் போது, ஒரு முன்னூறு பேருக்காக ஒரு மூன்று லட்சம் கோடிகளை சேர்த்தால் அது பொறுக்கவில்லையே இந்த விபீடணர் கூட்டத்திற்கு.

வட இந்தியாவிலே ஜம்ஷெட்ஜி டாடா என்று ஒருவர் இருந்தார். அவர் மும்பாயிலே காட்டன் மில்லைத் தொடங்கினார். அவருக்குப் பின் வந்த அவர் வாரிசுகளெல்லாம், வரிசையாக தொழிலை விரிவு படுத்தி, இன்று டாடா குழுமம் என்ற மிகப் பெரும் சாம்ராஜ்யத்தை ஏற்படுத்தியுள்ளனர். அவர்கள் குபேரக் குடும்பமா, அல்லது நான் குபேரக் குடும்பமா ?

இந்தியாவிலே முதன் முறையாக ஒரு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்திய ஊழல், தியாகத் திருவிளக்கின் கணவர் அருமை நண்பர் ராஜீவ் செயல்படுத்திய போபர்ஸ் ஊழல். அந்த ஊழலின் மொத்த மதிப்பே 66 கோடி ரூபாய்தான்.

ஆனால், இந்தியாவே வியக்கும் அளவுக்கு, வாயில் விரல் வைக்கும் அளவுக்கு, எண்ணி மகிழும் அளவுக்கு, பூரிப்பால் இதயம் விம்மும் அளவுக்கு, தமிழ் கூறு நல்லுலகு பெருமை கொள்ளும் அளவுக்கு, ஸ்பெக்ட்ரம் விற்பனையில் ஒரு லட்சம் கோடி ரூபாய் ஊழலை புரிந்திருப்பது ஒரு பிற்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஒரு தமிழன் என்பதால்தானே இந்த பொச்சரிப்பு ? வக்கரிப்பு ? மனக்கரிப்பு ? குவியும் வெறுப்பு ? என்னை அழிக்க வேண்டுமென்ற துடிப்பு ?

ஆனால், இது போன்ற தாக்குதல்களெல்லாம், கண்ணப்ப நாயினார் சிவபெருமானை கல்லால் வழிபட்டபோது, மலர்களாக மாறி அவருக்கு மரியாதை செய்தது போல எனக்கும் மரியாதை செய்கின்றன.

அய்யகோ. இந்தியா டுடே வார இதழில் உண்மையை எழுதி விட்டார்களே. ஊழலை அம்பலப்படுத்தி விட்டார்களே. என்று உடனடியாக பதவி விலகி நத்தையைப் போல ஓட்டுக்குள் ஒளிந்து கொள்ளும் அளவுக்கு நான் என்ன சூடு சொரணை உள்ளவனா ? காண்டாமிருகத்தை விட தடித்த தோலுண்டு. பதிலளிக்க எழுதுகோளுண்டு. கழக கண்மணிகளிடம் வீர வாளுண்டு.

குபேரக் குடும்பம் என்று என்னை அழைக்கிறார்களே, நானும் என் குடும்பத்தாரும் அப்படி என்ன பேராசைக்காரர்களா ? வாய்க்கு வாய் திராவிடம், திராவிடம் என்று அழைத்தாலும், தெலுங்கு பேசும் ஆந்திரம், மலையாளம் பேசும் கேரளம், கன்னடம் பேசும் கர்நாடக மாநிலங்களை அப்படியேவா விலைக்கு வாங்கி விட்டோம் ? தமிழகத்தையும் பாண்டிச்சேரியையும் அபகரித்து விட்டு திருப்தியோடு இருக்கவில்லை ?

பெங்களுருவில் இப்போதுதான் கால் பதித்திருக்கிறோம். கேரளாவுக்கு, குமுளி வழியாக இப்போதுதான் புறப்படத் தொடங்கியிருக்கிறோம். சந்திரபாபு நாயுடுவிடம் இப்போதுதான் பேசிக் கொண்டிருக்கிறோம். அதற்குள்ளாக என்ன அவசரம் ?

பேராசைக் காரனைப் போல என்னை சித்தரித்திருக்கிறார்களே ? கொடுக்கும் மனமற்றவனா இந்தக் கருணாநிதி ? இலங்கைக்கு கச்சத்தீவை வழங்கவில்லை ? கேரளாவுக்கு முல்லைப் பெரியாறை வழங்க வில்லை ? ஆந்திரத்துக்கு பாலாற்றை வழங்கவில்லை ? கர்நாடகத்துக்கு காவிரியை வழங்கவில்லை ? சொத்து சேர்க்க வேண்டும் என்பதற்காக எனது மானம் மரியாதையெல்லாம் வாரி வழங்கவில்லை ? என்னைப் போய் பேராசைக்காரன் போல எழுதியிருக்கிறார்களே ?

எஜமான் படத்திலே தம்பி நெப்போலியன் ஒரு வசனம் பேசுவார். கல்யாண வீடு என்றால் நான்தான் மாப்பிள்ளையாக இருக்க வேண்டும். இழவு வீடு என்றால் நான்தான் பிணமாக இருக்க வேண்டும் என்று. அந்த வசனத்தை நான் எழுதவில்லையே தவிர, அந்த வசனத்தின் படிதானே நான் இன்று வரை நடந்து கொண்டிருக்கிறேன்.
திருக்குவளையிலிருந்து வந்த ஒரு தமிழன் வந்தான். வென்றான் என்று மட்டும் இல்லாமல், மெக்சிகோவின் கார்லோஸ் ஸ்லிம் போலவோ, பில் கேட்ஸ் போலவோ, வாரன் பஃபெட் போலவோ முகேஷ் அம்பானி போலவோ, லட்சுமி மிட்டல் போலவோ, உலக பணக்காரர்களில் ஒருவன் இந்தக் கருணாநிதி. அவன் மட்டுமல்லாமல், அவன் குடும்பத்தினர் அனைவரையும் உலக பணக்காரர்களில் ஒருவனாக ஆக்கி விட்டான் என்று வரலாற்றில் எழுதி விடப் போகிறார்களே என்று அஞ்சியல்லவா இன்று இந்தியா டுடே என்ற ஏடு எழுதி கிழித்திருக்கிறது ?

இது போன்று இந்தியா டுடே என்ற நாளேடு அன்றே எழுதும் என்று அறிந்துதான் அண்ணா, அடைந்தால் திராவிட நாடு என்று சொன்னார். நிரந்தரமாக பாம்புக்கும் பல்லிக்கும் நடுவே வைத்து விடுவார்களோ, என்று எண்ணி இன்பத் திராவிடத்துக்கு இறுதி அஞ்சலி செலுத்தியதன் விளைவுதானே இது போன்ற இந்தியா டுடே என்ற ஏடுகள் ஆட்டம் போடுகின்றன ?

இன்பத் திராவிடம் அமைந்திருந்தால் இந்தியா டுடே ஏடு இருந்திருக்குமா ? திராவிடா டுடே என்றுதானே ஒரு ஏடு இருந்திருக்கும். அதையும் என்னுடைய ரைசிங் சன் யாராவது ஒருவர் தானே நடத்திக் கொண்டிருப்பார்கள் ?

ஆனந்தத் தாண்டவம் போடும் இந்தக் கூட்டத்தின் ஆட்டத்தை ஒழிக்க வேண்டாமா ? கொட்டத்தை அடக்க வேண்டாமா ? என்று எண்ணி எனது அன்பு உடன்பிறப்புகள் ஆர்ப்பரிப்பது எனக்கு தெரிகிறது. ஒரு புறம் பழக்கடை அன்பழகனும், மறுபுறம் விஎஸ் பாபுவும், மற்றொரு புரம் உசேனும், தெற்கே ஸ்டிக்கர் பொட்டும் கிளம்புகிறது என்றால், சிறுபான்மை சமுதாயத்தைச் சேர்ந்த அன்பு இளவல் ஐபிஎஸ் அதிகாரி என்பதையும் மறந்து, நோன்பை துறந்து, கழக உடன்பிறப்பாக மாறி அந்த அலுவலகத்தை துவம்சம் செய்ய புலியென புறப்பட்டு வருகிறார்.

இந்த அன்புக்கு என்ன கைமாறு செய்யப் போகிறான் இந்தக் கருணாநிதி ? எப்படி அடக்கப் போகிறான் இந்த புறநானூற்றுப் புலிக் கூட்டத்தை ?

இந்த நேரத்திலேதான் காதில் தேனினும் இனிமையாக கழகத்தின் நிரந்தர இளைஞர் அணித் தலைவரும், துணைப் பொதுச் செயலாளர்களிலே ஒருவரான மு.க.ஸ்டாலினைப் பற்றி சிறப்பு மலர் ஒன்று அந்த ஏடு கொண்டு வரப் போவதாக செய்தி அறிந்தேன்.

வன்முறையிலே என்றுமே நம்பிக்கை இல்லாதவன் இந்தக் கருணாநிதி. அறிஞர் அண்ணா என்னை கடமை, கண்ணியம் கட்டுப்பாட்டோடுதான் வளர்த்திருக்கிறார். அதனால், இந்தப் புறநானூற்றுப் புலிக் கூட்டத்தை இப்போதைக்கு அமைதியாக இருக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

வீழ்வது யாராக இருந்தாலும் வாழ்வது நானும் எனது குடும்பமாகவும் இருக்க வேண்டும் என்பது தானே வள்ளுவன் வாக்கு ?

ஊரையடித்து உலையில் போட்டு; குடும்பத்தோடு
நிம்ம தியாக வாழ்

என்றுதானே அய்யன் வள்ளுவன் எனக்கு கற்றுத் தந்திருக்கிறான் ? இதை நீ அறியமாட்டாயா உடன்பிறப்பே ?.

அன்புடன்

மு.க

--நன்றி ---சவுக்கு..